சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
ஏழாம் திருமுறை
7.41 திருக்கச்சூர் ஆலக்கோயில்
பண் - கொல்லிக் கௌவாணம்
முதுவாய் ஓரி கதற முதுகாட்
    டெரிகொண் டாடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்
    மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
    கண்டால் அடியார் கவலாரே
அதுவே ஆமா றிதுவோ கச்சூர்
    ஆலக் கோயில் அம்மானே.
1
கச்சேர் அரவொன் றிரையில் அசைத்துக்
    கழலுஞ்சிலம்புங் கலிக்கப் பலிக்கென்
றுச்சம் போதா ஊரூர் திரியக்
    கண்டால் அடியார் உருகாரே
இச்சை அறியோம் எங்கள் பெருமான்
    ஏழேழ் பிறப்பும் எனையாள்வாய்
அச்சம் இல்லாக் கச்சூர் வடபால்
    ஆலக் கோயில் அம்மானே.
2
சாலக் கோயில் உளநின் கோயில்
    அவையென் றலைமேற் கொண்டாடி
மாலைத் தீர்ந்தேன் வினையுந் துரந்தேன்
    வானோர் அறியா நெறியானே
கோலக் கோயில் குறையாக் கோயில்
    குளிர்பூங் கச்சூர் வடபாலை
ஆலக் கோயிற் கல்லால் நிழற்கீழ்
    அறங்கட் டுரைத்த அம்மானே.
3
விடையுங் கொடியுஞ் சடையும் உடையாய்
    மின்னேர் உருவத் தொளியானே
கடையும் புடைசூழ் மணிமண் டபமுங்
    கன்னி மாடங் கலந்தெங்கும்
புடையும் பொழிலும் புனலுந் தழுவிப்
    பூமேல் திருமா மகள்புல்கி
அடையுங் கழனிப் பழனக் கச்சூர்
    ஆலக் கோயில் அம்மானே.
4
மேலை விதியே வினையின் பயனே
    விரவார் புரமூன் றெரிசெய்தாய்
காலை யெழுந்து தொழுவார் தங்கள்
    கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே
    மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
    ஆலக் கோயில் அம்மானே.
5
பிறவாய் இறவாய் பேணாய் மூவாய்
    பெற்ற மேறிப் பேய்சூழ்தல்
துறவாய் மறவாய் சுடுகா டென்றும்
    இடமாக் கொண்டு நடமாடி
ஒறுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
    கண்டால் அடியார் உருகாரே
அறவே ஒழியாய் கச்சூர் வடபால்
    ஆலக் கோயில் அம்மானே.
6
பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால்
    அதுவும் பொருளாக் கொள்வானே
மெய்யே எங்கள் பெருமான் உன்னை
    நினைவார் அவரை நினைகண்டாய்
மையார் தடங்கண் மங்கை பங்கா
    கங்கார் மதியஞ் சடைவைத்த
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர்
    ஆலக் கோயில் அம்மானே.
7
ஊனைப் பெருக்கி உன்னை நினையா
    தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்
கானக் கொன்றை கமழ மலருங்
    கடிநா றுடையாய் கச்சூராய்
மானைப் புரையும் மடமென் னோக்கி
    மடவா ளஞ்ச மறைத்திட்ட
ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய்
    ஆலக் கோயில் அம்மானே.
8
காதல் செய்து களித்துப் பிதற்றிக்
    கடிமா மலரிட் டுனையேத்தி
ஆதல் செய்யும் அடியார் இருக்க
    ஐயங் கொள்வ தழகிதே
ஓதக் கண்டேன் உன்னை மறவேன்
    உமையாள் கணவா எனையாள்வாய்
ஆதற் பழனக் கழனிக் கச்சூர்
    ஆலக் கோயில் அம்மானே.
9
அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர்
    ஆலக் கோயில் அம்மானை
உன்ன முன்னும் மனத்தா ரூரன்
    ஆரூ ரன்பேர் முடிவைத்த
மன்னு புலவன் வயல்நா வலர்கோன்
    செஞ்சொல் நாவன் வன்றொண்டன்
பன்னு தமிழ்நூல் மாலை வல்லார்
    அவரெந் தலைமேற் பயில்வாரே.
10
(*) இத்தலத்தில் சிவபெருமான் அக்ரஹாரத்தில் அன்னம் பிட்சை வாங்கி சுந்தரருக்கு அளிக்க, அவர் அருந்திப் பசி தீர்ந்து துதிசெய்த பதிகம்.
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com